தமிழ்நாடு
அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வருகிறதா சிதம்பரம் நடராஜர் கோவில்? அமைச்சர் சேகர்பாபு தகவல்!
பல வருடங்களாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்விக்கு பதிலளிக்கையில், ‘சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தி உள்ளோம் என்றும் இதுதொடர்பாக முதல்வர் தனி கவனம் எடுத்து வருகிறார் என்றும் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் விரைவில் தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நடராஜர் கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைக்கு மத்தியில் உள்ள பெரும்பாலான பிரபலமானவர்கள் நடராஜர் கோவிலின் பக்தர்கள் என்பதும் நடராஜர் கோவில் மேல் கை வைத்தால் பல விபரீதங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக திமுக நடராஜர் கோவில் மேல் கை வைத்தால் சுப்ரமணியம்சாமி அதிரடியாக களம் இறங்குவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.