இந்தியா
பங்குச்சந்தையில் ரூ.100 கோடி மோசடி செய்த தம்பதி.. ஏமாந்த பிரபல நடிகர்கள்
கேரளாவை சேர்ந்த தம்பதிகள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து இரட்டிப்பு வருமானம் தருவதாக பிரபல நடிகர்கள் உள்ளிட்ட பலரிடம் ஏமாற்றி நூறு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை சேர்ந்த வர்கீஸ் மற்றும் அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி ஆகிய இருவர் போலியான நிறுவனம் ஒன்றை நடத்தி அந்த நிறுவனத்தின் மூலம் முதலீட்டாளர்களை கவர்ந்தனர். குறிப்பாக அவர்களது குறி டாக்டர்கள் மற்றும் பிரபல நடிகர்கள்தான் என்பது தெரிய வந்துள்ளது.
சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு பணத்தை பெற்ற பின்னர் அவர்கள் திடீரென தலைமறைவானதாகவும் தெரிகிறது. முதலீட்டாளர்களின் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் ஆடம்பர செலவு செய்ததாகவும் கோவா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இருவரும் தம்பதி சதவீதமாக செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி சூதாட்டத்திலும் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் முதலீட்டார்கள் சுமார் 120 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். இருப்பினும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் டெல்லி விமான நிலையத்தில் அவர்கள் தரையிறங்கிய போது கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
முதல் கட்ட விசாரணையில் பிரபல நடிகர்கள் உள்பட சுமார் 120 பேர்களிடம் 100 கோடி ரூபாய் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு சில ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி முதலீடு பெற்றதாகவும் அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்ததாகவும் கூறியுள்ளனர். பங்குச்சந்தை பெயரை வைத்து முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த தம்பதி மீது 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.