இந்தியா

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் சட்டப் பிழைகள் உள்ளன: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்!

Published

on

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத்தின் சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதியான நிலையில் தற்போது தீர்ப்பில் சட்டப் பிழைகள் உள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

#image_title

2019-இல் கர்நாடகாவின் கோலார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்திருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியை கைது செய்யக்கோரி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் குமார் என்பவர் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் ஆபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை 13-ஆம் தேதி நடைபெற்று தீர்ப்பு 20-ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில், நீதிமன்றம் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அவரது 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதியாகியது. எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் உறுயாகியது.

#image_title

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பேசுகையில், மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது. மோடி என்ற பெயர் கொண்ட 13 கோடி பேருடன் சேர்ந்து பிரதமர் மோடியையும் குடும்பப் பெயரால் அவதூறாக இழிவுபடுத்தி உள்ளனர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு பிரதமரின் மதிப்பை குலைத்திருக்கிறது. ஏனெனில் பிரதமர் புகார்தாரர் இல்லை என்பதை நீதிபதி மறந்துவிட்டார். இந்த தீர்ப்பில் சட்டப் பிழைகள் உள்ளன. விரைவில் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். அப்போது இந்த இரண்டு தீர்ப்புகளிலும் உள்ள சட்டப் பிழைகள் சரி செய்யப்படும். இந்த உத்தரவால் ராகுல் காந்தியின் குரலை மௌனமாக்கி விடலாம் என்று பாஜக நினைக்க வேண்டாம். மக்கள் நீதிமன்றத்தில் ராகுல் தொடர்ந்து அச்சமின்றி பேசுவார் என தெரிவித்தார்.

Trending

Exit mobile version