இந்தியா
சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு விசா: இதுதான் ப.சிதம்பரம் வீட்டின் சோதனைக்கு காரணமா?
சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு கார்த்தி சிதம்பரம் விசா வாங்கி கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் இன்று அவருடைய வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் .
சென்னையில் உள்ள சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள், டெல்லியில் உள்ள வீடு, சிவகெங்கையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் பல குழுக்களாகப் பிரித்து சோதனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது 250 சீனர்களுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு முறைகேடாக விசா வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில் உள்ள முறைகேடுகளை அடுத்தே சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
250 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கியதில் கார்த்திக் சிதம்பரம் 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.