தொழில்நுட்பம்
‘எங்கள விட்டு போயிறாதீங்க..’ வாட்ஸ்அப் நிறுவனம் கதறல்
வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி பெரும்பாலானோர் சிக்னல் செயலியை நோக்கி படையெடுக்கும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் தனியுரிமைக் கொள்கை, நிபந்தனைகளைப் புதுப்பித்து, அதனை ஏற்றுக்கொள்வதற்கு பிப்ரவரி 8 ஆம் தேதி வரையில் காலஅவகாசம் வழங்கியது. அந்த பிரைவசி கொள்கைகள் அனைத்தும் பயனர்களின் தரவுகளுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக, பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் விதமாக இருந்ததாக புகார்கள் வந்தன.
இதனால் வாட்ஸ்அப்புக்கு மாற்றான செயலியை வாடிக்கையாளர்கள் தேடத்தொடங்கினர். இதனிடையே சிக்னல் செயலியைப் பயன்படுத்துமாறு எலான் மஸ்க் தெரிவித்தால், பெரும்பாலானோர் சிக்னல் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் சிக்னல் ஆப் நம்பர் ஒன் இடத்திற்கு வந்தது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளது. அதில், வாட்ஸ்அப் பிரைவசி குறித்து தவறான, குழப்பான தகவல்கள் பரபரப்பப்படுவதாகவும், அந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் நாங்கள் உங்கள் உதவுகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், பிரைவசி கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட கால அவகாசத்தை மே 15 வரை நீட்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.