சினிமா செய்திகள்
விமர்சனங்களுக்கு என்ஜிகே ஸ்டைலிலேயே விடை அளித்த சூர்யா!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே திரைப்படம் கலவையான விமர்சனங்களுக்கு இடையே வசூல் வேட்டை ஆடி வருகிறது. சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள், படத்திற்கு முட்டு கொடுக்கும் விதமாக, படத்தில் பல லேயர்கள் இருப்பதாகவும், அதனை உற்று நோக்கினால் தான் படம் புரியும் என்றும், இரண்டாம் பாகத்தில் தான் படமே புரியும் என்று சிலர் தங்களுக்குத் தோன்றியதை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.
செல்வராகவனும் சமீபத்தில் டிகோடிங் குறித்து மறைமுகமாக ட்வீட் செய்திருந்தார். ஆனாலும், பெரும்பான்மையான விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள், படத்தில் ஒன்றும் இல்லை சூர்யாவை செல்வரா ஏமாற்றி விட்டார் என்றும், சிலர் சூர்யா தனது குடும்ப இமேஜை காப்பாற்றிக் கொள்ள ராவான காட்சிகளை வெட்டச் சொல்லிவிட்டார் என்றும் கருத்துகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், படம் குறித்த விமர்சனங்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ”என்ஜிகே திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ள சூர்யா, என்ஜிகே படத்தில் வரும் வசனமான கத்துக்கறேன் தலைவரே என்ற ஹேஷ்டேகை டிரெண்டாக்கி உள்ளார்.