தமிழ்நாடு
முன்னேறிய வகுப்புக்கு 10% இட ஒதுக்கீடு: அனுமதி இல்லை என நீதிமன்றம் உத்தரவு
முன்னேறிய உயர்ஜாதி வகுப்பினர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை என்றும் உச்சநீதி மன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதனை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பரிந்துரை அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீடு இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து திமுக சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ’தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து தான் வழக்கு என்றும் மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் எனவே தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை ஐகோர்ட் நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கப்பட்டு உள்ளதால் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படவில்லை என்றும், இட ஒதுக்கீட்டு முறை என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்ஜாதி வகுப்பினர் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் ஒப்புதல் பெறவில்லை என்றால் அதனை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.