சினிமா செய்திகள்
சிம்புவின் மிகப்பெரிய ஆக்ஷன் படமாம்- திருச்செந்தூரில் தொடங்கிய ‘வெந்து தணிந்தது காடு’ ஷூட்டிங்
நடிகர் சிம்புவின் மிகப்பெரிய ஆக்ஷன் படம் ஆக கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ இருக்கும் என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவுக்கு விரைவில் மாநாடு படம் வெளியாக உள்ளது. இந்த சூழலில் இயக்குநர் கெளதம் மேனன் உடன் இணைந்து தனது அடுத்தப் படத்துக்கான படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கி உள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் இயக்க, சிம்பு நடிப்பில், ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று திருச்செந்தூரில் தொடங்கி உள்ளது. இதுகுறித்து ஐசரி கணேஷ் கூறுகையில், “சிம்புவின் ஆக்ஷன் படங்களிலேயே மிகப்பெரியதாக இந்தப் படமாக இருக்கும். கெளதம் மேனனின் அழகுத் தமிழ் பெயர்களுக்கு நான் விசிரி. பாரதியாரின் பாடல் வரிகளில் இருந்து ‘வெந்து தணிந்தது காடு’ என்னும் தலைப்பு படத்துக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.
கிராமம் மற்றும் நகரத்தில் மாறி மாறி நடக்கும் ஆக்ஷன் கதை ஆக ‘வெந்து தணிந்தது காடு’ இருக்கும். சிம்புவிடம் இதுவரையில் யாரும் பார்த்திராத அவரின் அத்தனை நடிப்புப் பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் திரைப்படமாக இந்தப் படம் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.