தமிழ்நாடு
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவியதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து தமிழக அரசும், காவல்துறையும் எடுத்த சீறிய நடவடிக்கையால் நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வேறு மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் வீடியோக்களை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். சமூக ஊடகங்களில் இப்படி கீழ்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
வேண்டும் என்றே வதந்தி பரப்பி அச்சத்தையும் பீதியையும் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் நேராது. வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.