கிரிக்கெட்
நேற்றைய போட்டியில் நடராஜன் களமிறக்கப்படாதது ஏன்? விவிஎஸ் லட்சுமண் விளக்கம்!
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய அந்த ஹைதராபாத் அணி முதல் 10 ஓவர்கள் வரை ஆட்டத்தை தனது பக்கமே வைத்திருந்தது. ஆனால் அதன் பின் திடீரென ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டு மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன் களமிறக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து ஐதராபாத் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமணன் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:
நேற்றைய ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் களமிறங்கவில்லை. அவரின் இடதுகாலில் லேசான வீக்கம் இருந்ததால் தொடர்ந்து அவர் சிரமப்படக்கூடாது என்பதற்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கலீல் அகமது களமிறக்கப்பட்டார். நடராஜன் காலில் ஏற்பட்ட வீக்கம் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து வருகிறோம். சன்ரைசர்ஸ் மருத்துவ ஆலோசகர்கள் சரியான முடிவை எடுப்பார்கள். அது அவருக்கும், உரிமையாளருக்கும் பயனளிக்கும்” என்று விவிஎஸ் லட்சுமண் கூறினார்.