தமிழ்நாடு
“பொள்ளாச்சி விவகாரத்தில் சீக்கிரமே நடவடிக்கை…”- உதயநிதி உறுதி
கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் ஒரு கும்பல், அங்குள்ள பல இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது குறித்தான காணொலிகள் வெளியாகி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கைப் பொறுத்தவரை அதிமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்குத் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதையொட்டி திமுகவினர் சென்ற ஆண்டு முதலே அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தேர்தலின் போதும் இந்த விவகாரத்தை கையிலெடுத்து திமுகவினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இப்படியான சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்படி, திமுக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இதனால் பொள்ளாச்சி விவகாரத்தில் இனிமேல் விசாரணை முடுக்கிவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதை மெய்ப்பிக்கும் வகையில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘கண்டிப்பாக பொள்ளாச்சி விவகாரத்தில் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் அந்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்படும்’ என்று கூறினார்.