தமிழ்நாடு
எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார்!
எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு செங்கலை திருடியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அவ்வாறு அவர் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கையில் ஒரு செங்கலை வைத்துக்கொண்டு இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கேலியாக கூறியிருந்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிய பின்னரும் இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பதை குறிப்பிடும் வகையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் செங்கலை திருடி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக நிர்வாகி நீதி பாண்டியன் என்பவர் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.