செய்திகள்
பார்கள் திறக்க அனுமதி…தமிழக அரசு அறிவிப்பு….குடிமகன்கள் மகிழ்ச்சி…
தமிழக அரசு ஏற்கனவே ஆகஸ்டு 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அது முடிய இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி. 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி, கடற்கரையில் பொதுமக்கள் அனுமதி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி, மழலையர் காப்பகங்கள் இயங்க அனுமதி. நீச்சல் குளங்கள் 50 % பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி என முக்கிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுப்பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மதுபான கூடம் எனப்படும் பார்கள் வருகிற 23 ம் தேதி செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் அதை அருந்த இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பலரும் டாஸ்மாக் கடையின் அருகிலேயே ஓரமாய் நின்று குடித்து வருகின்றனர். அதேபோல், தனியார் பார்களும் செயல்படாமல் இருந்தது. தற்போது பாருக்கு அனுமதி அளித்திருப்பது குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.