தமிழ்நாடு
சூரப்பாவுக்கு நோட்டீஸ்: நேரில் விசாரிக்கவும் முடிவு என நீதிபதி தகவல்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகள் செய்ததாக வழக்கு புகார் கூறப்பட்டதை அடுத்து அவர் மீதான புகாரை விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் தற்போது தீவிர விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தர் சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழு சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
சூரப்பா மீதான முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க அந்த நோட்டீஸில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோட்டீசுக்கு பதில் தரும் சூரப்பாவின் விளக்கத்தை பொறுத்தே அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் ஒருவேளை சூரப்பாவின் பதில் திருப்திகரமாக இல்லை என்றால் அவரை நேரில் அழைத்து விசாரணை செய்யப்படும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது அதிமுக அரசு முடிவுக்கு வந்து திமுக ஆட்சி தொடங்கியிருக்கும் நிலையில் சூரப்பாவின் மீதான விசாரணை தொடருமா அல்லது கிடப்பில் போடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.