தமிழ்நாடு
கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை: ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் தினந்தோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நேற்று மட்டும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உறவினர்கள் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவதே இந்த கூட்டத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்த ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை என்றும் தனியார் மருத்துவமனைகள் தேவை இல்லாமல் இம்மருந்தை அனைத்து நோயாளிகளுக்கும் பரிந்துரை செய்கிறது என்றும் அவ்வாறு பரிந்துரை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்து ஒரு சில குறிப்பிட்ட கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே தேவைப்படும் என்றும் அவர்களுக்கு மட்டுமே அந்த மருந்தை செலுத்தினால் போதுமானது என்றும் ஏற்கனவே மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.