செய்திகள்
மழையில் மயங்கி விழுந்தவரை தோளில் தூக்கி சென்ற பெண் காவல் ஆய்வாளர்.. வைரல் வீடியோ…
வட கிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதோடு, புதிதாக உருவாகியுள்ள புயல் இன்று மாலை சென்னையை கரை கடக்கவுள்ளது. எனவே, புயல் கரையை கடக்கும் போது 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் எனில், சென்னையில், திறந்தவெளியில் தங்கியிருந்த மற்றும் பணி செய்து கொண்டிருந்த பலரும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செல்லும் இடம் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டில் பணிபுரிந்து வந்த வாலிபர் ஒருவர் நீண்ட நேரம் மழையில் நனைந்ததால் கல்லறையில் மயங்கி விழுந்தார். அவரை பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தனது தோளில் தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு அங்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைதொடர்ந்து அந்த ஆய்வாளர் ராஜேஸ்வரியை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வாலிபரை அவர் தோளில் தூக்கி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Inspector Rajeshwari rescued a man, who was found lying unconscious at T P Chathiram pic.twitter.com/3k2Gf3y0cl
— SINDHU KANNAN (@SindhukTOI) November 11, 2021