தமிழ்நாடு
கோணி புளுகன் கோயபல்ஸ்: எடப்பாடி பழனிசாமியை விளாசிய அழகிரி!
தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேகதாதுவில் அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என கூறியதாக தெரிவித்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று கூறியிருந்தார். சித்தராமையா முதல்வராக இருந்தபோது நாம் கோரிக்கை வைத்தும் தண்ணீர் திறந்துவிடவில்லை. நேரில் சந்திக்க வருகிறேன் என்று கூறியதற்கும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
கர்நாடகாவில் திமுகவின் கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஆட்சிதான் நடக்கிறது. எனவே தயவு செய்து இங்கு எவ்வளவோ பேசுகிற நீங்கள், தண்ணீரை திறந்துவிட ஏற்பாடு செய்தால், காவிரி தண்ணீர் மேட்டூருக்கு வந்து, அதன் மூலம் வீராணத்துக்கு வந்து சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும் என்றார்.
இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இதே கருத்தை தேனி பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கூறியபோது, அதை வன்மையாக மறுத்து 14.4.2019 அன்று கடுமையான கண்டனத்தை தெரிவித்தேன். இப்போது மீண்டும் அதே கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஒரு பொய்யை நூறுமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற நோக்கத்தில் கோணி புளுகன் கோயபல்சை மிஞ்சுகிற வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.
இந்த பேச்சுக்கு என்ன ஆதாரம்? என்ன அடிப்படை? எந்த ஊடகத்திலாவது ராகுல்காந்தி இப்படி பேசியதாக வெளிவந்திருக்கிறதா? தமிழக முதலமைச்சரை சவால் விட்டு கேட்கிறேன், அதற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா? பேசாத ஒன்றை பேசியதாக திரித்து கூறுவதால் உங்கள் பொறுப்பை தட்டிக்கழித்து விட முடியாது.
எனவே, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் எள்ளின் முனையளவு கூட உண்மை இல்லாத வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசாததை பேசியதாக திரும்பத் திரும்ப கூறுகிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதற்கான ஆதாரத்தை உடனடியாக வெளியிட வேண்டும். அப்படி வெளியிட முடியவில்லையெனில் ஆதாரமற்ற அவதூறு கருத்தை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என விளாசியுள்ளார்.