உலகம்
இந்தோனேசியாவில் பயங்கர சுனாமி: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!
இந்தோனேசியாவின் சுந்தா நீரிணைப்பு பகுதியில் உள்ள அனாக் கிராக்கட்டு எரிமலை வெடித்ததால் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் அங்கு பயங்கர சுனாமி தாக்கியுள்ளது. இந்த சுனாமியின் காரணமாக 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சுனாமி குறித்து தெரிவித்த இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை,நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கின என்று முதலில் நினைத்தோம். ஆனால் கிராக்கட்டு எரிமலையில் உள்ள குட்டி எரிமலை வெடித்து கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுனாமி ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.
சுந்தா ஸ்ட்ரைட், பண்டங்க்ளாங், செராங், தெற்கு லம்பூங் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலை தாக்கியுள்ளது. இதனால் சுமார் 222 பேர் பலியாகி இருப்பதாகவும், 843 பேர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் இந்த சோக சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டுவிட்டரில், நட்பு நாடான இந்தோனேசியாவுக்கு நிவாரணப் பணிகளில் உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.