கிரிக்கெட்
பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!
நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதின் மூலம் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவும் அரையிறுதிக்குள் நுழைந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் போட்டி வங்கதேசம், இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தது.
104 ரன்னில் ரோஹித் ஷர்மா முதலில் வெளியேற சிறிது இடைவெளியில் கே.எல்.ராகுல் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி 26 ரன்னும் ரிஷப் பண்ட் 48 ரன்னும் சேர்த்தனர். அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியாமல் போனது. தோனி 35 ரன்னில் வெளியேற பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் தரப்பில் முஸ்தஃபிர் ரஹ்மான் 5 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி 39 ரன்னில் தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனையடுத்து சீரான இடைவெளியில் வங்கதேச விக்கட்டுகள் விழுந்தாலும், அவர்கள் ரன் குவிக்கவும் தவறவில்லை. இதனால் வங்கதேச அணியின் ரன் ரேட் குறையாமல் சீராக வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டில் தொடர்ந்தது.
ஒரு கட்டத்தில் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பினாலும் வங்கதேச அணி வீரர்கள் விடாமல் போராடினர். இதனால் வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்திவிடுமே என்ற அச்சம் ஒரு ஓரத்தில் இருந்துகொண்டு தான் இருந்தது. குறிப்பாக முகமது சைஃபுதின் 38 பந்துகளில் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது ஆட்டம் வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்லும் விதமாக இருந்தது. ஆனால் அதற்குள் இந்திய அணி வீரர்கள் அனைத்து விக்கெட்டுகளையும்வீழ்த்தினர்.
48 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன் 66 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நேற்று அடித்த சதத்துடன் இந்த உலகக் கோப்பை தொடரில் தனது நான்காவது சதத்தைப் பூர்த்தி செய்த ரோஹித் ஷர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.