செய்திகள்
வங்கி மேலாளரை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவர்.. பகீர் பின்னணி….
காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியில் வசித்து வருபவர் அச்சுதானந்தன்(40). இவரின் மனைவி மனோபாரதி(37). இவர் கிண்டி பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் 13 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அச்சுதானந்தனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் குடிக்கு அடிமையாகியுள்ளார். எனவே, வேலைக்கே செல்லாமல் நாள் முழுவதும் மதுஅருந்தி வந்துள்ளார். எனவே, இது தொடர்பாக அவருக்கும், அவரின் மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
நேற்று மாலை 4 மணியளவில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டில் இருந்து சுத்தியால் மனைவியின் தலையில் அச்சுதானந்தன் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில், மனோபாரதி பலத்த காயமடைந்தார். எனவே, ஆம்புலன்ஸ் மூலம் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். எனவே, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெ.ஜெ.நகர் போலீசார் அச்சுதானந்தனை கைது செய்தனர். மேலும், எதற்காக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.