இந்தியா
சிகிச்சை பெற்று வந்த 20 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்: பெரும் பரபரப்பு!
சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 20 பேர் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கும்பமேளா திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 20 பேர் திடீரென காணாமல் போயுள்ளதாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் தப்பிச் சென்றவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 7 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் மேலும் உத்திரபிரதேசம் ஹரியானா மற்றும் ஒரிசாவில் சேர்ந்தவர்கள் தலா நான்கு பேரும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காணாமல் போன கொரோனா நோயாளிகள் மீது பேரிடர் மேலாண்மை மற்றும் தொற்று நோய் பரவும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக 20 கொரோனா நோயாளிகளின் வீடுகளில் விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். தப்பியோடிய 20 நோயாளிகளும் இன்னும் ஒரு சில நாட்களில் பிடிபடுவார்கள் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கும்பமேளாவில் கலந்து கொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.