தமிழ்நாடு
கழகத்தை காட்டிக்கொடுத்த ஐந்தாம் படையினர் இவர்கள்: முரசொலி விளாசல்!

முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இந்த பேரணியில் கலந்துகொண்டவர்களை கழகத்தை காட்டிக்கொடுத்த ஐந்தாம் படையினர் என முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறிவந்த அழகிரி தற்போது அவரை தலைவராக ஏற்றுக்கொள்கிறோம் என்னை திமுகவில் மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள் என பகிரங்கமாக பேட்டியளித்தார்.
ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததையடுத்து தனது பலத்தை நிரூபிக்க அழகிரி தனது ஆதரவாளர்களை திரட்டி சென்னையில் பேரணி ஒன்றை நடத்தி கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அரசியல் முக்கியத்துவம் பெற்ற இந்த பேரணி குறித்து திமுக தரப்பு அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான முரசொலியின் அழகிரியின் பேரணிக்கு பதிலளிக்கும் விதமாக பெட்டிச்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், வெளிப்பகை… உட்பகை! என்ற தலைப்பில் வெளிப்பகை யுத்த தளவாடங்களோடு வரும். உட்பகை கருப்புச் சந்தைக்காரர்கள், கொள்ளை வியாபாரிகள், பதுக்கல் காரர்கள், அவசர நிலை உணராமல் ஆர்பாட்டங்களில் ஈடுபடும் ஐந்தாம் படையினர் ஆகியோர் உருவிலே வரும் என கலைஞர் கருணாநிதி சொன்னதையே எழுதியுள்ளனர். இதன் மூலம் அழகிரியின் பேரணியில் கலந்துகொண்டோர் கழகத்தைக் காட்டிக் கொடுக்கும் ஐந்தாம் படையினர் என்று விமர்சித்துள்ளனர்.















