இந்தியா
நீதிபதிகளை மாற்றும்போதே தெரியும் இது நடக்கும் என்று… கோழைத்தனம், சர்வாதிகாரம்… மல்லிகார்ஜுன கார்கே விளாசல்!

2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிருப்தி தெரிவித்துள்ளார்.

#image_title
2019-இல் கர்நாடகாவின் கோலார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரை வைத்திருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியை கைது செய்யக்கோரி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் குமார் என்பவர் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் ஆபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராகுல்காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், அதிகாரத்தின் ஒட்டுமொத்த சக்தியும் ராகுல் காந்தியின் குரலை நசுக்க முயல்கிறது. என் சகோதரர் ஒருபோதும் பயந்தது இல்லை. பயப்படவும் மாட்டார் என்றார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், நீதிபதிகளை மாற்றிக்கொண்டே இருந்ததால் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குத் தெரியும். இது போன்று ஏதாவது நடக்கும் என்று. சட்டம் மற்றும் நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக சட்டப்படி போராடுவோம் என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய பாஜக தலைமையிலான அரசாங்கத்தை கோழைத்தனம், சர்வாதிகாரம் என்றும் சாடினார். பாஜக அரசு ராகுல் காந்தியால் குத்தப்பட்டுள்ளது என்றும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வோம் என்றும் அவர் கூறினார்.