இந்தியா

அதானி குழுமத்தின் பங்குகள் ரூ.1 என இறங்கினால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டமில்லை.. எப்படி தெரியுமா?

Published

on

அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்துள்ளதால் எல்ஐசிக்கு மிகப்பெரிய நஷ்டம் என்றும் இரண்டே நாள்களில் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை எல்ஐசி சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதானி குழுமத்தில் எல்ஐசி மிக அதிகமாக முதலீடு செய்துள்ள நிலையில் அந்நிறுவனங்களின் பங்குகள் ஒரு ரூபாய் என சரிந்தால் கூட எல்ஐசிக்கு நஷ்டம் இல்லை என கூறப்படுகிறது.

பங்குச்சந்தையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இதனை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்ஐசி நிறுவனமும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்பட்டது.

ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் எல்.ஐ.சி இடம் இருந்த அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு ரூபாய் 72,000 கோடி என்றும் ஆய்வறிக்கைக்கு பின்னர் எல்ஐசி இடம் இருந்தா அதானி குழுமத்தின் பங்குகள் ரூபாய் 55,700 கோடி எனவும் கூறப்படுகிறது. அதாவது இரண்டே நாட்களில் ரூ.27,300 கோடி அதானி குழுமத்தால் எல்.ஐ.சிக்கு நஷ்டம் என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மை என்னவெனில் அதானி குடும்பத்தில் எல்ஐசி முதலீடு செய்த போது அந்நிறுவனத்தின் பங்குகள் மிகக் குறைந்த விலையில் இருந்தன என்றும் அதனால் தற்போது 27,300 கோடி நஷ்டம் அடைந்தாலும் தற்போதும் எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகள் வாங்கிய விலையை விட பல மடங்கு அதிக விலையில் தான் வைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

உதாரணமாக அதானி டோட்டல் கேஸ் பங்கை எல்.ஐ.சி கடந்த 2018ஆம் ஆண்டு 63 ரூபாய் என்ற விலையில் 19,57,05,645 பங்குகளை வாங்கியது. இந்த பங்கின் விலை ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட இருமடங்கு உயர்ந்தது. அதாவது 2019ஆம் ஆண்டு இந்த பங்கின் விலை ரூ.110. 2020 ஆம் ஆண்டு இந்த பங்கின் விலை 370, 2021ஆம் ஆண்டு இந்த பங்கின் விலை ரூ.1872 மற்றும் 2022ஆம் ஆண்டு இந்த பங்கின் விலை ரூ.4000 ஆகும். எனவே 63 ரூபாய்க்கு வாங்கிய பங்கை ரூ.2000 என்று இருந்தபோதே எல்.ஐ.சி பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை விற்று அசலை மட்டுமின்றி மிகப்பெரிய லாபத்தையும் எடுத்துவிட்டது. எனவே இப்போது கையில் இருக்கும் பங்குகள் ரூ.1 என இறங்கினால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டமில்லை. எனவே அதானி குழுமத்தால் எல்.ஐ.சிக்கு நஷ்டம் என்றும், பாலிசிதாரர்களின் பணம் அம்போ என்றும் கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதானி குழுமங்களின் பங்குகள் சரிந்துள்ள நிலையில் தற்போது மேலும் 300 கோடி ரூபாய்க்கு அதானி குழுமங்களின் பங்குகளை எல்.ஐ.சி வாங்க இருப்பதாகவும் நாளை மறுநாள் பட்ஜெட் தொடங்க இருக்கும் நிலையில் பட்ஜெட்டுக்கு பின் அதானி குழுமத்தின் பங்குகள் மீண்டும் உயர்ந்தால் எல்ஐசிக்கு மீண்டும் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version