தமிழ்நாடு
ரஜினிக்கு கருத்து செல்ல உரிமையில்லையா? குஷ்பு ஆதரவு டுவீட்!
தேசிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை முன்னரே வெளியிட்ட நிலையில் தற்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நதிகள் இணைப்பு குறித்த வாக்குறுதி உள்ளது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இந்தியாவிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்தும், அதற்கென தனி ஆணையத்தை உருவாக்குவோம் எனவும் வாக்குறுதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறினார் ரஜினிகாந்த்.
ரஜினியின் இந்த பாஜக ஆதரவு கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களும் இந்த விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதுகுறித்து கூறியபோது பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினகாந்த் பாராட்டியது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் ரஜினி இயங்குகிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று என கூறினார்.
இவ்வாறு ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, பாஜகவின் தேர்தல் அறிக்கையைப் பற்றி ரஜினி சார் பேசியதைவைத்து ஏன் ஊடகங்கள் இவ்வளவு கூப்பாடு போடுகின்றது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நதிகள் இணைப்பு பற்றி ஒரு வார்த்தைப் பேசினார். அதனால் என்ன? ஓர் இந்தியக் குடிமகனாக ஒரு கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை இல்லையா? அதை ஏன் அரசியலாக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.