கிரிக்கெட்

பஞ்சாபை வீழ்த்தி 5வது வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா அணி!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடந்த 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்சை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு, பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்கம் தந்தனர். பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களுக்கு அவுட் ஆக, அடுத்து வந்த பானுகா ராஜபக்சே ரன் எதுவும் எடுக்காமலும், லியாம் லிவிங்ஸ்டன் 15 ரன்களும், ஜிதேஷ் ஷர்மா 21 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

பஞ்சாப் 179 ரன்கள்

விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான், ஐபிஎல் போட்டி தொடரில் தனது அடித்த 50வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஷிகர் தவான் 57 ரன்னிலும், சாம் கர்ரன் 4 ரன்னிலும், ரிஷி தவான் 19 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

கடைசி 2 ஓவர்களில் தமிழக வீரர் ஷாருக்கான் மற்றும் ஹர்பிரீத் பிரார் ஆகியோர் அதிரடி காட்டியதால், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 21 ரன்னுடனும், ஹர்பிரீத் பிரார் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணித் தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டும், சுயாஷ் ஷர்மா, நிதிஷ் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

கொல்கத்தா த்ரில் வெற்றி

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாசன் ராய், ரமனுல்லா குர்பாஸ் ஆகியோர் அடித்து ஆடினர். ரமனுல்லா குர்பாஸ் 15 ரன்னிலும், ஜாசன் ராய் 38 ரன்னிலும், வெங்கடேஷ் அய்யர் 11 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அரைசதத்தை எட்டிய நிதிஷ் ராணா 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் வந்தது. 5வது பந்தில் ஆந்த்ரே ரஸ்செல் ரன்-அவுட் ஆக, கடைசிப் பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங், பவுண்டரி விளாசி வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Trending

Exit mobile version