உலகம்
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இலங்கை ராணுவம் என்ன சொல்கிறது தெரியுமா?
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இலங்கை ராணுவம்.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், சர்வதேச சூழலும், இலங்கையின் ராஜபக்ஷே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசிய தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார் என தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த தகவலில், பிரபாகரன் 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதற்கான DNA ஆதாரங்களும் உள்ளது. பழ.நெடுமாறன் தவறான தகவல்களை வெளியிடுகிறார். அவரின் இந்த அறிவிப்பு எங்களுக்கு எந்த எச்சரிக்கையையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அவர் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். அதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.