உலகம்

தவறுதலாக வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1.28 கோடி பணம்.. ஜெயிலுக்கு அனுப்பிய துபாய் நீதிமன்றம்!

Published

on

தவறுதலாக ரூ.1.28 கோடி வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த இந்தியரை துபாய் நீதிமன்றம் சிறைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வங்கி கணக்கு திடீரென ரூ.1.28 கோடி வந்ததை பார்த்த இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவருக்கு பணத்தை தவறுதலாக அனுப்ப்பிய மருந்து நிறுவனம் அந்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து மருந்து நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பணத்தை திருப்பி தர மறுத்த இந்தியருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர் வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு மாத தண்டனை முடிந்ததும் இந்தியாவுக்கு அவர் கடத்தப்படுவார் என்றும் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருந்து வர்த்தக நிறுவனம் தெரிவித்தபோது விபரங்களை சரிபார்க்காமல் இந்தியர் ஒருவரின் கணக்கிற்கு ரூபாய் 1.28 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது. நாங்கள் கண்டுபிடித்தவுடன், பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை குறித்த தகவலை அந்த இந்தியருக்கு தெரிவித்தோம். அவர் தனக்கு பணம் வந்ததை ஒப்புக் கொண்டார் என்றும் ஆனால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க அவர் மறுத்து விட்டார் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து இந்தியர் தரப்பில் விளக்கம் அளித்தபோது எனது வங்கி கணக்கில் 1.28 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டபோது நான் ஆச்சரியப்பட்டேன். எனது வாடகை மற்றும் செலவுகள், கடனை அடைத்தேன் என்று கூறிய அவர் அந்த நிதி தனது கணக்கிற்கு மாற்றப்பட்டதாக தெரிய வந்தாலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணம் தான் என்பது எனக்கு தெரியாது என்றும் அவர்கள் அதை அவர்கள் நிரூபிக்கவில்லை என்றும், அதனால் நான் பலமுறை கேட்டும் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறியதாக அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனை அடுத்து பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த இந்தியருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் தற்போது இல்லை என்றும் அவர் அந்த பணத்தை எடுத்து வேறு ஏதாவது வங்கியில் டெபாசிட் செய்து உள்ளாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறை தண்டனை பெற்ற இந்தியர் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளார் என்றும் இந்த மேல்முறையீட்டு வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version