கிரிக்கெட்
3வது டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி: 39 ரன்களுக்கு விழுந்த 5 விக்கெட்டுக்கள்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸ் நகரில் நடைபெற்று வந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது என்பதும் கேப்டன் விராட் கோலி உள்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் தங்களுடைய விக்கெட்டை பறிகொடுத்ததால் இந்தியா முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 குவித்தது என்பதும் கேப்டன் ஜோரூட்ஸ் சதமடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 354 ரன்கள் பின்தங்கி இருந்த இந்திய அணி 2-வது இன்னிங்சை நிதானமாக விளையாடி வந்தது. புஜாரா 91 ரன்களும், விராட் கோலி 55 ரன்களும் ரோகித் சர்மா 59 ரன்களும் எடுத்தாலும் அதன் பின்னர் விளையாடிய பேட்ஸ்மேன்கள் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்ததால் இந்தியா, 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இந்த போட்டியில் மிக அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்து அணியின் ஒலிவியோ ராபின்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.