கிரிக்கெட்

இந்தியா அபார பந்துவீச்சு… ஆஸ்திரேலியா 197 ரன்னில் சுருண்டது: மீண்டது இந்தியா?

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. இதில் நேற்று 109 ரன்னில் சுருண்ட இந்திய அணி இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலியாவை 197 ரன்களில் சுருட்டியுள்ளது.

#image_title

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 156 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 22, ஷுப்மன் கில் 21 ரன்களை எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை நேற்று தொடங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 156 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது. இதனையடுத்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி மீதமுள்ள 6 விக்கெட்டுகளையும் 41 ரன்கள் மேற்கொண்டு சேர்பதற்குள் இழந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது. இந்த இன்னிங்சில் இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது.

Trending

Exit mobile version