கிரிக்கெட்

நியூசிலாந்து வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான மோசமான தோல்வி.. இதற்கு முந்தைய மோசமான தோல்வி சென்னையிலா?

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பதும் நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிக மோசமான தோல்வி என்ற சாதனையையும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றதை எடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆலன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆன நிலையில் அதன்பின் விளையாடிய கான்வே, நிக்கோலஸ், மிட்செல் மற்றும் கேப்டன் லாதம் ஆகிய நான்கு பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட் ரன்களில் அவுட் ஆகினர்.

இதனை அடுத்து பிரேஸ்வெல் , பிலிப்ஸ் மற்றும் சாண்ட்னர் ஆகிய மூவரும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியபோதிலும், இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சு காரணமாக நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் ஷமி மூன்று விக்கட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கட்டுகளையும், சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்,.

இதனையடுத்து 109 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் ரோகித் சர்மா அபாரமாக அரைசதம் அடித்தார். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில் 40 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசிய முகம்மது ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. மேலும் இந்த போட்டியில் 179 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இந்தியா வெற்றி அடைந்தது. இது இந்தியாவுக்கு எதிரான மோசமான தோல்வி என்ற சாதனையை நியூசிலாந்து பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் 173 பந்துகள் மீதமிருக்கையில் இந்தியாவிடம் நியூசிலாந்து தோல்வியடைந்தது. அதற்கு முன் 1994 ஆம் ஆண்டு 160 பந்துகள் மீதமிருக்கையில் ஆக்லாந்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வெற்றியை அடுத்து இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 24ஆம் தேதி இந்தூரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியிலும் இந்தியா வென்று நியூசிலாந்தை வாஷ் அவுட் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒருநாள் தொடருக்கு பின் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version