இந்தியா
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? உயரும்?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு சேவை வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன என்பதும், ஒரு சில பொருட்களுக்கு வரி நீக்கப்பட்டன என்பதும், சில பொருள்களுக்கு வரி அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றைய கூட்டம் முடிந்த பின்னர் எந்தெந்த பொருள்கள் விலை குறையும்? எந்தெந்த பொருட்கள் விலை உயரும்? என்பதை தற்போது பார்க்கலாம்.
புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி 18 லிருந்து 5 சதவிகிதமாக குறைந்துள்ளதால் இதன் விலை குறையும்.
டீசலில் கலப்பதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் பயோ டீசலுக்கு வரி 12ல் இருந்து 5 சதவிகிதமாக குறைந்துள்ளதால் டீசல் விலை குறையும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கருவிகள், உதிரிபாகங்கங்களுக்கு 5ல் இருந்து ஜிஎஸ்டி 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளதால் எரிசக்தி கருவிகள் விலை உயரும்.
அட்டைப்பெட்டி, பைகள், பேக்கிங் கன்டெய்னர்களுக்கு வரி 12ல் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டதால் விலை உயரும்.
அனைத்து வகையான பேனாக்களுக்கு 12ல் இருந்து ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக உயர்கிறது என்பதால் பேனா விலை உயரும்.
தூய மருதாணி பவுடருக்கு 5 சதவிகிதமும், நறுமண இனிப்பு பாக்குக்கு 18 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதால் இதன் விலை உயரும்.
பழச்சாறுடன் கூடிய கார்பனேட்டட் குளிர்பானங்களுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி மற்றும் 12 சதவிகித செஸ் விதிக்கப்பட்டுள்ளதால் இதன் விலை உயரும்
யூபிஎஸ் மற்றும் இன்வர்டர்களுடன் விற்பனை செய்யப்படும் பேட்டரிகளுக்கு 28 சதவிகிதமும், யூபிஎஸ் மற்றும் இன்வர்டர்களுக்கு 18 சதவிகிதமும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளதால் இதன் விலையும் உயரும்.
ஆன் லைனில் உணவு விநியோகிக்கும் ஸ்விகி, சோமோட்டோ நிறுவனங்கள் இனி ஜிஎஸ்டி வரியை ஹோட்டலில் வசூலிக்காமல், உணவு வாங்குபவரிடம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் உணவுகள் விலை உயரும்.