தமிழ்நாடு
கள்ளச் சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியார்குப்பத்தில், விஷ சாராயத்தை குடித்து இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். மேலும், 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
காவல் துறையினர் அதிரடி
கள்ளச் சாராயம் பிரச்சனை தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் சோதனை நடத்தி கள்ளச் சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவார்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், கள்ளச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மதுவிலக்குத் துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
- கள்ளச் சாராயத்தை தடுப்பதற்க, மாவட்ட அளவில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.
- கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் உண்டாகும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- மதுவிலக்கு குறித்து தகவல் அளிக்க 10581 என்ற எண் பயன்பாட்டில் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
- மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத் துறை அதிகாரிகளின் வீடுகளில், வாட்ஸ் அப் எண்களை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
- கள்ளச் சாராய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, மிகச் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் நியமிக்க வேண்டும்.
- தொழிற்சாலைகளில் மெத்தனால் மற்றும் எரிசாராயம் பயன்பாட்டை கவனிக்க வேண்டும்.
- விஷச் சாராயம் காய்ச்சுவதற்கு மெத்தனாலை பயன்படுத்தாமல் இருப்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
- கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது, பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.