இந்தியா
செல்பி எடுக்க அனுமதி இல்லை.. சுற்றுலா பயணிகளுக்கு நிபந்தனைகளை விதித்த கோவா அரசு!
ஒருவருடைய அனுமதியே இல்லாமல் அவருடன் செல்பி எடுக்கும் அநாகரிக வழக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செல்ஃபி எடுப்பதற்கு சில நிபந்தனைகளை கோவா அரசு விதித்துள்ளது.
கோவாவில் உள்ளாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் ஏராளமானோர் சுற்றுலா வருகை தரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் தனி உரிமையை கருத்தில் கொண்டு சில புதிய விதிகளை கோவா அரசு விதித்துள்ளது.
புதிய வழிகாட்டுதலின்படி சுற்றுலா பயணிகள் தங்களது சக சுற்றுலா பயணிகளுடன் செல்பி அல்லது புகைப்படங்களை எடுப்பதற்கு முன் அவர்களின் அனுமதியை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் தனி உரிமையை பாதுகாக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புகைப்படங்களை வைத்து மிரட்டுவதை தவிர்க்கவும் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகள் அந்நிய சுற்றுலா பயணிகளின் அனுமதி இன்றி குறிப்பாக சூரிய குளியலின்போது அல்லது கடலில் நீச்சலில் ஈடுபடும்போது செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்புகள் இதோ:
விபத்துகளைத் தவிர்ப்பதற்காக செங்குத்தான பாறைகள் மற்றும் கடல் பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பது தடை செய்யப்படுகிறது.
திறந்தவெளியில் உணவு சமைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதியை மீறினால், சமையல் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்
கடலோர பகுதிக்கு செல்லும் பயணிகள், பாரம்பரிய சின்னங்களை அழிக்கவோ அல்லது சேதப்படுத்தவோ கூடாது.
சட்டவிரோதமான தனியார் டாக்சிகளை வாடகைக்கு எடுக்காதீர்கள். அதிக கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க மீட்டர் கட்டணத்தை வலியுறுத்துங்கள்.
சுற்றுலாத் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட சட்டப்பூர்வ ஹோட்டல்கள்/வில்லாக்கள் அல்லது வீட்டு வசதிகளுடன் தங்குமிடங்களை முன்பதிவு செய்யுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடற்கரைகள் போன்ற திறந்தவெளி பகுதிகளில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குடிசைகள்/உணவகங்கள், ஹோட்டல்கள் போன்ற சட்டப்பூர்வமாக உரிமம் பெற்ற வளாகங்களுக்குள் மது அருந்தலாம்.
கோவாவில் உள்ள சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்படாத மற்றும் செல்லுபடியாகாத தனியார் வாகனங்கள் / வாடகை வண்டிகள் / மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.