இந்தியா
ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.1,688 கோடி கொடுத்து ஏமாந்த வங்கிகள்!

ஏற்கனவே வங்கிகளில் ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்துக்கு மீண்டும் கடன் கொடுத்த வங்கிகள் மீண்டும் ரூ.1,688 ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வங்கிகள் கடன் கொடுத்து வருகின்றன என்பதும் அந்த கடன்களை திரும்ப செலுத்தாமல் பல நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன என்பதும் தெரிந்ததே.
ஆயிரக்கணக்கான கோடிகளை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் நாட்டை விட்டு தப்பி சென்று விட்ட நிலையில் அவர்களிடம் இருந்து பணத்தை எப்படி வசூல் செய்வது என்று புரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே 22 ஆயிரம் கோடி ஏபிஜி ஷிப்யார்டு என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கமலேஷ் அகர்வால் என்பவருக்கு கடன் கொடுத்து வங்கிகள் ஏமாந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.1,688 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக கமலேஷ் அகர்வால் மீது வடக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ரூ.22,000 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக ரிஷி கமலேஷ் அகர்வால் என்பவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடி நாட்டிலேயே மிகப்பெரிய மோசடி என்றும் கூறப்பட்டது. இந்த வழக்கே இன்னும் முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது தவறான தகவல் அளித்து மீண்டும் ரூ.1,688 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் அதன் தலைமையில் கீழ் செயல்படும் சில வங்கிகள் சிபிஐயிடம் புகார் அளித்துள்ளன. இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் கமலேஷ் அகர்வால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே கடன் கொடுத்து மோசடி செய்த நிறுவனத்திற்கு எப்படி வங்கிகள் கடன் கொடுத்தன என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
சிறிய கடன்களை கொடுத்துவிட்டு அந்த கடனை திரும்ப செலுத்தாத பொதுமக்களை பொதுமக்களிடம் மிரட்டி வசூலிக்கும் வங்கிகள் பெரிய தொழில் அதிபர்களிடம் கோடி கணக்கில் ஏமாந்து வருவது தொடர் கதை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.























