வணிகம்
EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

அதிக சம்பளத்தின் அடிப்படையில் EPF (Employees’ Provident Fund) கணக்கிடப்படும் வகையில், சம்பள உச்சவரம்பை உயர்த்துவது குறித்து EPFO ஆலோசித்து வருகிறது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், அமைப்புசார்ந்த துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் மாதாந்திர சேமிப்பு அதிகரிக்கும் என்றும், ஓய்வு கால நிதி பாதுகாப்பு மேலும் வலுப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF Scheme), 1952-ன் படி, தற்போது ரூ.15,000 வரை மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் EPF-இல் கட்டாயமாக சேர வேண்டும். அடிப்படை ஊதியம், அகவிலைப்படி மற்றும் தக்கவைப்பு படி உள்ளிட்ட தொகையில் இருந்து ஊழியர் தனது சம்பளத்தின் 12% EPF பங்களிப்பாக செலுத்த வேண்டும். அதேபோல், பணியமர்த்தும் நிறுவனமும் ஊழியருக்காக 12% தொகையை பங்களிக்கிறது.
ஊழியர் 58 வயது நிறைவு பெற்ற பிறகு, இந்த EPF தொகையை ஓய்வு நிதியாக முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும். தற்போதைய விதிமுறைகளின்படி, ரூ.15,000-க்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே EPF-இல் சேர முடியும். ஆனால் பல நிறுவனங்கள் அதிக சம்பள ஊழியர்களை EPF திட்டத்தில் சேர்க்க தயக்கம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், EPF பங்களிப்புக்கான சம்பள உச்சவரம்பை ₹25,000 வரை உயர்த்துவது குறித்து பரிசீலனை நடைபெறுகிறது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், அதிக சம்பளத்தின் மீது EPF கணக்கிடப்படுவதால், ஊழியர்களின் மாதாந்திர சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம், ஓய்வு காலத்தில் கிடைக்கும் நிதி பாதுகாப்பும் உறுதியடையும்.
அதே நேரத்தில், நிறுவனங்களின் EPF பங்களிப்பு செலவும் உயரும் என்பதால், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது கூடுதல் பொருளாதார சுமையாக மாறும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும், பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், EPF கட்டமைப்பில் இத்தகைய மாற்றங்கள் அவசியம் என தொழிலாளர் நல வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
குறிப்பாக, 2014-க்கு பிறகு EPF சம்பள உச்சவரம்பில் பெரிய மாற்றம் செய்யப்படாததும் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், இதுவரை EPFO அல்லது மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.















