இந்தியா
சிவ சேனா கட்சி சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.. என்ன காரணம்?
தேர்தல் ஆணையம் மகாராஷ்டிராவிலிருந்து செயல்பட்டு வரும் சிவ சேனாவின் சின்னத்தைச் சனிக்கிழமை முடக்குவதாக அறிவித்துள்ளது.
இதனால் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே மற்றும் தற்போதைய முதல்வர் ஏக்னாத் ஷிண்டே என இருவரும், சிவ சேனாவின் வில் அம்பு சின்னத்தைப் பயன்படுத்த முடியாது.
அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ள நிலையில், இரண்டு தரப்பினரும் சிவ சேனாவின் சின்னத்தைப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இரண்டு தரப்பும் தேர்தல் ஆணையம் வழங்கும் இலவச சின்னங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து போட்டியிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவ சேனா கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்னாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் , சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா முதல்வர் பதவியை கைப்பற்றினார். தொடர்ந்து உத்தவ் தாக்ரே தரப்பும் ஷிண்டே தரப்பும் சிவ சேனா கட்சி யார்க்கு சொந்தம் என விவாதத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.