சினிமா செய்திகள்
பாலா ரிட்டர்ன்ஸ்… 3 ஹீரோக்களை வைத்துப் படம் எடுக்கிறார்!

தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இயக்குநர் பாலா, கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் கமிட்டாகாமல் உள்ளார்.
அவர் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்தார். நடிகர் விக்ரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாலா, அவரது மகன் துருவை வைத்து ‘வர்மா’ எனப் பெயர் சூட்டிப் படத்தை ரீமேக் செய்தார். மொத்தப் படமும் முடிவடைந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்திற்கு அவுட்புட் பிடிக்காமல் போனது. இதனால் அந்தப் படத்தை ரிலீஸ் செய்யப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது.
மீண்டும் மொத்தப் படமும் வேறு ஒரு இயக்குநரை வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படமும் அந்தளவுக்கு ரீச் ஆகவில்லை என்றாலும், துருவுக்கு பெயர் பெற்றுத் தந்தது. இந்தப் பட சர்ச்சைகளின் போதே பாலா, ‘துருவ் வளர வேண்டும். ஆகையால் நான் இந்த விவகாரத்தில் பெரிதாக கருத்து கூற விரும்பவில்லை’ என ஒதுங்கிக் கொண்டார். அப்போதிலிருந்து பாலாவின் கம்-பேக் படம் எதுவாக இருக்கும் என்னும் ஆர்வம் கோலிவுட்டில் நிலவி வந்தது.
இப்படியான நேரத்தில் தான் அடுத்ததாக அவர், மூன்று ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை எடுக்க உள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக தன் இயக்கத்தில் முன்னரே நடித்திருக்கும் அதர்வா, விஷால் மற்றும் ஆர்யாவை வைத்து பாலா புதிய படத்தை எடுக்க திட்டமிட்டு வருவதாக கோலிவுட் தகவல்.