சினிமா செய்திகள்
50 நாட்களைக் கடந்தும் 50 தியேட்டர்களில் ‘தளபதி’ விஜய்யின் மாஸ்டர்!
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விழாவின் போது திரையரங்குகளில் ரிலீஸான திரைப்படம் ‘தளபதி’ விஜய்யின் மாஸ்டர். 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்த போதும், தெறிக்கவிடும் ஹிட் அடித்த இந்தப் படம், இன்னமும் தமிழகத்தின் பல திரையரங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மாஸ்டர் திரைப்படம் மூலம் தான், தமிழக திரைத் துறை மீண்டும் புத்துயிர் பெற்றது என்றே சொல்லலாம். அந்தளவுக்கான வசூலை வாரிக் குவித்து, பலருக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்தது மாஸ்டர்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தான் ஓடும். நல்ல வரவேற்பைப் பெற்றத் திரைப்படம் என்றால் ஒரு மாத காலம் ஓடும்.
ஆனால் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்த பின்னரும் இன்னும் சுமார் 50 தியேட்டர்களில் தமிழகத்தில் இந்த திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று சினிமா துறையினர் பேசி வருகின்றனர்.
மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேலும், ஓடிடியில் மட்டும் தனியாக 50 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் ஆனதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், படத்தின் மொத்த வசூல் ரூபாய் 300 கோடியை நெருங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.