சினிமா செய்திகள்
மீண்டும் சினிமாவில் கம்-பேக் கொடுக்கும் ஷாலினி – எந்தப் படம், என்ன ரோல் தெரியுமா?
அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.
குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரையுலகில் அறிமுகமான ஷாலினி, தென்னிந்திய மொழிப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ஷாலினி, அஜித்துடன் இணைந்து ‘அமர்க்களம்’ படத்தில் நடத்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் முளைத்தது. அந்தக் காதல் 2000 ஆம் ஆண்டு, திருமணத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்னும் பெண் குழந்தை பிறந்தது. 2015 ஆம் ஆண்டு அவர்களுக்கு மீண்டும் ஆத்விக் என்னும் ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையைத் தான் அஜித் ரசிகர்கள் ‘குட்டித் தல’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
திருமணத்துக்குப் பின்னர் திரை வாழ்க்கைக்கு முடக்குப் போட்ட ஷாலினி, பேட்மின்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். அவர் தேசிய அளவில் முக்கிய பேட்மின்டன் வீராங்கனையாகவும் உயர்ந்தார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.
இயக்குநர் மணிரத்னம், பிரம்மாண்ட பொருட் செலவிலும், நட்சத்திரப் பட்டாளங்களுடனும் எடுத்து வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அந்தப் படத்தில் ஷாலினி ஒரு கேமியோ ரோல் செய்ய இருக்கிறாராம். ஷாலினியின் கம்-பேக் திரைப்படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.