சினிமா
நாயகியாக நடிக்கும் கோவை சரளா: இயக்குனர் யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி வேடத்தில் நடித்து வரும் நடிகை கோவை சரளா நாயகியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழ் திரை உலகில் கடந்த 1979ஆம் ஆண்டு ’வெள்ளி ரதம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ’முந்தானை முடிச்சு’ ’வைதேகி காத்திருந்தாள்’ உள்பட பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை கோவை சரளா. அவருடைய காமெடிக்கு என ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த ‘சதிலீலாவதி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த கோவை சரளா, அந்த படத்தில் கோவைத்தமிழ் பேசி கலக்கி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் நாயகியாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் அவர் ஒரு பாட்டி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி வாங்கித்தரும் சீரியசான கேரக்டர் என்றும் இந்த படத்தில் ஒரு காட்சி கூட காமெடி காட்சி இருக்காது என்றும் கூறப்படுகிறது.
ஆதிவாசிகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு நீதி வாங்கித்தரும் முக்கிய கேரக்டரில் கோவைசரளா நடித்து வருகிறார் என்றும் இந்த கேரக்டர் அவரது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் அளவுக்கு இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கும்கி, மைனா போன்ற மலை சார்ந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் பிரபுசாலமன் இந்த படத்தையும் முழுக்க முழுக்க மலை சார்ந்த பகுதியில் தான் படப்பிடிப்பை நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.