தமிழ்நாடு
அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில்லும், அதில் கிளம்பியுள்ள சில சந்தேகங்களும்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில் வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதன் படி சரியாக ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார். ஆனால் தற்போது அதில் சில சந்தேகங்கள் கிளம்பியுள்ளது.
பாஜக தலைமையகாமன கமலாலயத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் குறித்த விவரங்களை தெரிவித்தார். என்னுடைய ரஃபேல் வாட்ச் பெல் & ரோஸ் நிறுவனத்தினுடையது. இந்த வாட்சை தசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பெல் & ரோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனம் ரஃபேல் விமானத்தை தயாரித்த ஃபிரெஞ்சு நிறுவனம்.
மொத்தமே தயாரிக்கப்பட்ட 500 வாட்சுகளில் 147-வது வாட்ச் ஆகும் இது. நான் இந்த வாட்சை 2021-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். இந்த வாட்சை இனிமேல் யாரும் வாங்கமுடியாது, இந்த வாட்ச் தற்போது மார்க்கெட்டில் இல்லை என்றார் அண்ணாமலை.
ஆனால் இதில் உலா வரும் சில சந்தேகங்கள்: சேரலாதன் வாங்கிய வாட்ச் சீரியல் நம்பர் BRO394EBI147/500, அண்ணாமலை சேரலாதனிடமிருந்து வாங்கிய வாட்ச் சீரியல் நம்பர் BRO394DAR147.1 இரண்டு வாட்ச் பில் சீரியல் நம்பர்களும் வெவ்வேறாக உள்ளது. சேரலாதன் டைம்ஸ் கடையில் இருந்து வாங்கிய வாட்ச் டெலிவரி செல்லான் பேனாவால் எழுதப்பட்டுள்ளது. 4.50 லட்சம் ரூபாய்க்கு வாட்ச் வாங்கும் போது கம்பியூட்டர் பிரிண்ட் டெலிவரி செல்லான் தராமல் பேனாவால் எழுதி கொடுப்பார்களா என பலரும் கூறுகின்றனர்.
மேலும் மொத்தமே 500 வாட்சுகளே தயாரிக்கப்பட்ட ரஃபேல் வாட்சை சேரலாதன் வெறும் இரண்டு மாதங்களில் 1.50 லட்சம் ரூபாய் குறைத்து அண்ணாமலைக்கு ஏன் விற்றார்? முன்னதாக ஒரு பேட்டியில் அண்ணாமலை தான் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் 149-வது வாட்ச் என கூறியிருந்தார். ஆனால் அவர் சமர்ப்பித்த பில்லில் 147-வது வாட்ச் என கூறப்பட்டுள்ளது. வாட்சுக்கான தொகையை அண்ணாமலை சேரலாதனுக்கு ரொக்கமாக கொடுத்துள்ளார். ஆனால் வருமான வரித்துறை சட்டப்படி 2 லட்சத்துக்கும் அதிகமான பணப்பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமாக செய்ய வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.