சினிமா

சூர்யா படத்தோல்வி எதிரொலி; அமைதி காக்கும் இயக்குநர்!

Published

on

சூர்யா படத்தோல்வியால் பிரபல இயக்குநர் தனது அடுத்தப் படம் குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்.

‘மெரினா’, ‘பசங்க’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். நடிகர் கார்த்தியின் சினிமா பயணத்தில் இவர் கொடுத்த ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் அதிகமான ஃபேமிலி ஆடியன்ஸை அவருக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகர் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை அடைந்தது. இது தயாரிப்பு தரப்புக்கு தோல்வியை கொடுத்துள்ள ஒரு படம் என்றும் பாண்டிராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்.

இந்த நிலையில் படம் வெளியாகி பல மாதங்கள் ஆன பின்பும் இன்னும் அவர் தனது அடுத்த படம் குறித்து அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். நடிகர் சூர்யாவை தொடர்ந்து மீண்டும் கார்த்தியை இயக்குவதற்கு கதை சொல்லிவிட்டு அவரது தேதிக்காக காத்திருந்தார் பாண்டிராஜ். ஆனால், நடிகர் கார்த்தி தற்போது ‘ஜப்பான்’, ‘சர்தார்2’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக இருப்பதால் பாண்டிராஜுக்கு பதில் தராமல் போகவே, விஷாலை அணுகி இருக்கிறார். விஷால் சம்மதம் தெரிவித்த போதும் அவர் தற்பொழுது அடுத்தடுத்து பிரச்சினைகளில் சிக்கி வருவதால் அவர் வேண்டாம் என பாண்டிராஜ் தரப்பு ஒதுங்கி இருக்கிறது.

இதனை அடுத்து தற்போது வெளியாகியுள்ள ‘விடுதலை’ படத்தின் மூலம் நடிகர் சூரி கதையின் நாயகனாக மிகப்பெரிய கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சூரியும் பாண்டிராஜூம் நெருக்கமானவர்கள் என்பதால் சூரியை வைத்து தற்பொழுது ஒரு படம் இயக்க முடிவு செய்து இருக்கிறார் பாண்டிராஜ். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம். நடிகர் சூரி ‘விடுதலை’ படத்திற்கு பிறகு ‘கொட்டுக்காளி’ படத்தில் பிசியாக இருக்கிறார். இதற்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களை குறைத்துக் கொண்டு கதையில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலேயே நடிகர் சூரி அதிகம் நடிப்பார் எனத் தெரிகிறது.

Trending

Exit mobile version