தமிழ்நாடு
முட்டப் போண்டா, ஆம மூக்கன், பெட்டைத்தன அரசியல், டோக்கன் செல்வர்: தினகரன் மீது அதிமுக பாய்ச்சல்!
அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் மோதல் முற்றியுள்ள நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா தினகரனை மிக கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், திமுகவை ஆதரிப்பாராம் திகார்கரன். அம்மா அமர வைத்த சபாநாயகர் மீது அவநம்பிக்கை என்கிற மு.க.ஸ்டாலினின் முடிவுக்கு முட்டப் போண்டாவும் ஒத்து ஊதுவாராம். இருக்காதா பின்ன, தொன்னூறுகளிலேயே லண்டனில் ஆயிரம் கோடிக்கு ஆடம்பர ஓட்டல் வாங்கி விட்டு அந்நிய செலவாணி மோசடி உள்ளிட்ட அத்தனை விபரங்களும் விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவின் விரல் நுனியில் என்றதும், திமுகவோடு திரைமறைவு பேரம் நடத்தி தன் மீதான வழக்கை மட்டும் திரும்ப பெற வைத்திட்ட துரோக தினகரனின் மொத்த முகமுடியும் அன்றே கிழ்ந்தது இப்போதும். டோக்கனார் தான் திமுகவின் சிலிப்பர் செல் என்பதும், செந்தில் பாலாஜியும், கலைராஜனும் திமுகவுக்கு அவராலே அனுப்பி வைக்கப்பட்ட ஆட்கள் தான் என்பதும் தெளிவுக்கு வந்திருக்கு இப்போது தெருவுக்கும் தெரிஞ்சிருக்கு.
உண்ணவும் நினையாது உழைத்து உறங்கவும் முனையாது விழித்து தன் உடல் பேணாது தன்நலம் பாராது ஓடி ஓடி அலைந்து ஊரெங்கும் பிரச்சாரம் புரிந்து பாசத்தாய் வெற்றி பெற வைத்த பதினெட்டு பேரின் பதவிகளை பதராக்கி முடித்து விட்டு குக்கருக்கு ஓட்டு போட்டு வீட்டுக்கு வா பத்தாயிரம் வாங்கிப்போ என்று ஹவாலா அரசியல் மூலம் ஆர்கே நகர் மக்களை ஏமாற்றிய அன்னிய செலவாணி மோசடி பேர்வழியின் திமுகவுடனான திரைமறைவு பேரமே உள்ளாட்சியிலும் அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தி ஓசி பிரியாணி கட்சிக்கு ஒத்தாசை செய்ய வேண்டும் என்பதே.
இந்த தீயசக்திகளின் திரைமறைவு பேரங்கள் இப்போது மொத்தமும் தெரிஞ்சிருச்சு. ஆமமூக்கன் கட்சியின் கொ.ப.செ. சொல்வது போல் ஃபெரா மோசடியும் பெட்டைத்தன அரசியலுமே டோக்கன் செல்வரின் வாழ்க்கை என்பதில் முத்தமிழ் பூமியும் முடிவுக்கே வந்திருச்சு. என தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளது அதிமுக.