சினிமா செய்திகள்
திரைத்துறை தொழிலாளர்கள் 100 பேருக்கு ஸ்மார்ட் போன் தானம் வழங்கிய பிரபல வில்லன்!
ஆச்சர்யா படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் திரைத்துறை தொழிலாளர்கள் 100 பேருக்கு நடிகர் சோனு சூட் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவத்தொடங்கியதில் இருந்து நடிகர் சோனு சூட் பல்வேறு விதமான சமூக நல உதவிகளை செய்து வருகிறார். ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், ரஷியாவில் சிக்கத்தவித்த தமிழர்கள் திரும்பி வருவதற்கான விமான ஏற்பாடு, விவசாயிக்கு டிராக்டர் வழங்கியது என பல உதவிகளை செய்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது திரைத்துறை தொழிலாளர்கள் 100 பேருக்கு சோனு சூட் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார். சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆன்லைன் கல்வி கற்கமுடியாமல் இருந்து வந்தனர். இது சோனு சூட்டின் கவனத்திற்கு செல்லவே, உடனடியாக 100 தொழிலாளர்களுக்கு புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத திரைத்தொழிலாளர்கள், சோனுவின் தார்மீக செயலை எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்துவிட்டனர். மேலும், அனைவரும் உற்சாகத்துடன் சோனுவிற்கு நன்றி கூறினர். தெலங்கானாவில் கிராமத்தினர்கள் சோனு சூட்டின் உதவிகளை பாராட்டி அவருக்கு கோயில் கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.