இந்தியா
ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

கொரோனா காலகட்டத்தில் இந்திய குடிமக்கள் அணைவரின் அன்றாட செயல்பாடுகளுக்கு “ஆரோக்கிய சேது“ செயலி தவிர்க்க முடியாததாக விளங்கியது. இந்த ஆரோக்கிய சேது செயலி இப்போது புதிய பரிமாணத்தை அடைந்து “ஆரோக்கிய சேது 2.0“ என்ற புதிய வடிவில் மீண்டும் படிப்படியாக கட்டாய பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.
அண்மையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா “ஆரோக்கிய சேது 2.0 “ செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
“ஆயுஷ்மான் பாரத்“ எண்ம திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலி இனி வெறும் தொற்றுநோய் கண்காணிப்புக்காக மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியரின் “எண்ம மருத்துவ நாள்காட்டி“ ஆக மாறவிருக்கிறது.
இதில் (6) ஆறு முக்கிய சிறப்பம்சங்கள் இடம் பெற உள்ளன.
- முழு குடும்பமும் ஒரே கணக்கில் :
இனிமேல் வீட்டில் உள்ள முதியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனி கைபேசிகளில் இந்த செயலியை நிறுவத் தேவையில்லை. ஆரோக்கிய சேது செயலியில் ஒரே கணக்கின் கீழ் பெற்றோர் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளின் மருத்தவ விவரங்களை இணைத்து நிர்வகிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
- ஏ.ஐ.மருத்துவ ஆவணங்கள் :
உங்கள் பழைய பரிசோதனை அறிக்கைகள் மருந்துச் சீட்டுகளை பிடிஎஃப் அல்லது புகைப்படமாக செயலியில் பதிவேற்றம் செய்தால் போதும். அதில் உள்ள ஏ.ஐ. தொழில்நுட்பம் சீட்டில் உள்ள தகவல்களை உடனடியாக எண்ம ஆவணங்களாக மாற்றி உங்களுக்கான பிரத்யேக சுகாதார தகவல் பலகையை (ஹெல்த் டேஷ் போர்டு) உருவாக்கித் தரும்.
- பிஎம்ஜேஏஒய் வாலெட் :
மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் தங்களுக்கு இன்னும் எவ்வளவு மருத்துவக் காப்பீட்டுத் தொகை பாக்கி உள்ளது, குடும்பத்தில் யார் யார் எவ்வளவு பயன்படுத்தியுள்ளனர் என்ற விவரங்களை இந்த வாலெட் மூலம் வெளிப்படையாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
- ஸ்மார்ட் வாட்சுடன் இணைக்கும் வசதி :
உங்களின் ஸ்மார்ட் வாட்சில் உடல் தகுதியைப் பின்தொடருதல் (ஃபிட்னஸ் டிராக்கர்) வசதியை இந்த செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களின் தினசரி நடைப்பயிற்சி இதயத்துடிப்பு கலோரி எரிப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவைச் செயலியே தொடர்ந்து கண்காணிக்கும்.
- அவசரகால உதவிகள் :
உங்கள் இருப்பிடத்துக்கு அருகே இருக்கும் மருத்துவமனைகள் மட்டுமின்றி “ இ-ரக்த்கோஷ்“(e-Raktkosh) மூலம் அருகில் உள்ள ரத்த வங்கிகளில் தற்போதைய ரத்த இருப்பு விவரம் மற்றும் அவசர ஊர்தியை முன்பதிவு செய்யும் வசதியும் இதில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
- மருந்து நினைவூட்டல் :
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை நோயாளிகள் சரியான நேரத்துக்கு உட்கொள்வதை உறுதி செய்ய “டோஸ்“ மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு “நினைவூட்டல்“ நிர்ணயித்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. மருத்துவமனைகளில் வரிசையில் நிற்காமல் “ஜ்கேன் அன்ட் ஷேர்“ முறையில் புறநோயாளி சிகிச்சை (ஓபிடி) பெறும் வசதியும் இந்த செயலியில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த செயலியை எப்படி நிறுவுவது?
உங்களுடைய கைப்பேசியில் செயலி பதிவிறக்க தளத்தில் ஆரோக்கிய சேது (Aarogya Setu) என ஆங்கிலத்தில் தட்டச்ச செய்து பதிவிறக்கம் செய்தால் ஆரோக்கிய சேது 2.0 செயலி பதிவிறக்கமாகும். பிறகு உரிய அனுமதிகளை வழங்கியதும் உங்களுடைய விருப்ப மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். பிறகு உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்தவுடன் வரும்“ கடவுச் சொல்லை செயலியில் குறிப்பிட்டவுடன் உங்கள் ஆதார் எண்ணில் உள்ள தரவுகளை செயலி காண்பிக்கும். அதில் உங்கள் பெயருக்குரிய தரவை தேர்வு செய்ய வேண்டும். பிறகு சுகாதார லாக்கரில் விவரங்கள் ஏற்கனவே பதிவு செய்திருக்காவிட்டால் உங்களுடைய ஆதார் எண்ணை செயலி கேட்கும். அதனை உள்ளீடு செய்த பிறகு மீண்டும் 6 இலக்க கடவுச்சொல் குறுஞ்செய்தியாக வரும். அதனை உள்ளீடு செய்த பிறகு ஓராண்டுக்கு செல்லத்தக்க தரவு சரிபார்ப்புக்கான அனுமதி உங்களிடம் பெறப்படும். உடனே சுகாதார லாக்கர் வெற்றிகரமாக செயலியில் நிறுவப்பட்டதாக தகவல் வரும்.
பிறகு குடும்ப மேலாண்மை பிரிவில் “குடும்பத்தை நிர்வகி“ என்ற பகுதிக்குள் சென்றால் குடும்ப உறுப்பினர்களின் தரவுகளை பதிவேற்றிக் கொள்ளலாம். இதேபோல் மேலே சொன்ன ஆறு அம்சங்களின் சேவைகளுக்கான தகவல்களையும் பெற தனித்தனி இணைப்புகள் செயலியில் இடம்பெறும். அவற்றைச் சரியாக உள்ளீடு செய்து பலன் அடையலாம்.















